விநாயகர் அகவல் வரிகள்

 

 

ஐந்து கரத்தனை

ஆனை முகத்தனை

இந்தின் இளம் பிறை

போலும் எயிற்றனை

நந்தி மகன் தனை

ஞானக் கொழுந்தினை

புந்தியில் வைத்து

அடி போற்றுகின்றேனே

 

சீதக் களபச் செந்தாமரைப் பூம்

பாதச் சிலம்பு பல இசை பாட

பொன் அரைஞாணும் பூந்துகில் ஆடையும்

வன்ன மருங்கில் வளர்ந்து அழகெறிப்ப

பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்

வேழ முகமும் விளங்கு சிந்தூரமும்

அஞ்சு கரமும் அங்குச பாசமும்

நெஞ்சில் குடிகொண்ட நீலமேனியும்

நான்ற வாயும் நாலிரு புயமும்

மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்

இரண்டு செவியும் இலங்கு பொன்முடியும்

திரண்ட முப்புரி நூல் திகழொளி மார்பும்

சொற்பதம் கடந்த துரியமெய் ஞான

அற்புதம் நின்ற கற்பகக் களிரே

சொற்பதம் கடந்த துரியமெய் ஞான

அற்புதம் நின்ற கற்பகக் களிரே

 

முப்பழம் நுகரும் மூஷிக வாகன

இப்பொழுது என்னை ஆட்கொள வேண்டித்

தாயாய் எனக்குத் தான் எழுந்தருளி

மாயாப் பிறவி மயக்கம் அறுத்து

திருந்திய முதல் ஐந்தெழுத்தும் தெளிவாய்ப்

பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து

குருவடிவாகிக் குவலயம் தன்னில்

திருவடி வைத்துத் திறமிது பொருளென

வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்

கோடாயுதத்தால் கொடுவினை களைந்தே

 

உவட்டா உபதேசம் புகட்டி என் செவியில்

தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி

ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்

இன்புறு கருணையின் இனிதெனக்கு அருளிக்

கருவிகள் ஒடுங்கும் கருத்தினை அறிவித்து

இருவினை தன்னை அறுத்து இருள் கடிந்து

தலம் ஒரு நான்கும் தந்தெனக் அருளி

மலம் ஒரு மூன்றின் மயக்கம் அறுத்தே

ஒன்பது வாயில் ஒரு மந்திரத்தால்

ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி

ஆறாதாரத்து அங்குச நிலையும்

பேறா நிறத்திப் பேச்சுரை அறுத்தே

 

இடை பிங்கலையின் எழுத்தறிவித்துக்

கடையில் சுழுமுனைக் கபாலமும் காட்டி

மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின்

நான்று எழு பாம்பின் நாவில் உணர்த்திக்

குண்டலி அதனில் கூடிய அசபை

விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து

மூலாதாரத்தின் மூண்டெழு கனலை

காலால் எழுப்பும் கருத்தறிவித்தே

 

அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்

குமுத சகாயன் குணத்தையும் கூறி

இடைச் சக்கரத்தின் ஈரெட்டு நிலையும்

உடற் சக்கரத்தின் உறுப்பையும் காட்டிச்

ஷண்முக தூலமும் சதுர்முக சூட்சமும்

எண்முகமாக இனிதெனக்கு அருளிப்

புரியட்ட காயம் புலப்பட எனக்குத்

தெரியெட்டு நிலையும் தரிசனப்படுத்திக்

கருத்தினில் கபால வாயில் காட்டி

இருத்தி முத்தி இனிதெனக்கு அருளி

என்னை அறிவித்து எனக்கு அருள் செய்து

முன்னை வினையின் முதலைக் களைந்து

வாக்கும் மனமும் இல்லா மனோலயம்

தேக்கியே என்றன் சிந்தை தெளிவித்து

இருள்வெளி இரண்டுக்கு ஒன்றிடம் என்ன

அருள் தரும் ஆனந்தத்தை அழுத்தி என் செவியில் -ஆ-ஆ

 

எல்லை இல்லா ஆனந்தம் அளித்து

அல்லல் களைந்தே அருள்வழி காட்டி

சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டி

சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி

அணுவிற்கு அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய்

கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி

வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்

கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி

அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை

நெஞ்சக் கருத்தின் நிலையறிவித்துத்

தத்துவ நிலையைத் தந்து எனையாண்ட

வித்தக விநாயக விரைகழல் சரணே

 

வித்தக விநாயக விரைகழல் சரணே

வித்தக விநாயக விரைகழல் சரணே

 

Ramaswamy Sastry and Vighnesh Ghanapaathi

Other stotras

Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |