தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்;
திரு நீல கண்டத்துக் குயவனார்க்கு அடியேன்;
இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்;
இளையான் தன் குடிமாறன்அடியார்க்கும் அடியேன்;
வெல்லுமா மிக வல்ல மெய்ப்பொருளுக்கு அடியேன்;
விரி பொழில் சூழ் குன்றையார் விறல் மிண்டற்கு அடியேன்;
அல்லி மென் முல்லை அந்தார் அமர் நீதிக்கு அடியேன்;
ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே . 1
இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தற்கு அடியேன்;
ஏனாதி நாதன் தன் அடியார்க்கும் அடியேன்;
கலை மலிந்த சீர் நம்பி கண்ணப்பர்க்கு அடியேன்;
கடவூரில் கலயன் தன் அடியார்க்கும் அடியேன்;
மலை மலிந்த தோள் வள்ளல் மானக்கஞ்சாறன்,
எஞ்சாத வாள்-தாயன், அடியார்க்கும் அடியேன்;
அலை மலிந்த புனல் மங்கை ஆனாயற்கு அடியேன்;
ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே. 2
மும்மையால் உலகு ஆண்ட மூர்த்திக்கும் அடியேன்;
முருகனுக்கும், உருத்திர பசுபதிக்கும், அடியேன்;
செம்மையே திரு நாளைப் போவார்க்கும் அடியேன்;
திருக்குறிப்புத் தொண்டர் தம் அடியார்க்கும் அடியேன்;
மெய்ம்மையே திருமேனி வழிபடா நிற்க,
வெகுண்டு எழுந்த தாதைதாள் மழுவினால் எறிந்த,
அம்மையான் அடி சண்டிப் பெருமானுக்கு அடியேன்;
ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே. 3
திரு நின்ற செம்மையே செம்மையாக் கொண்ட
திருநாவுக்கரையன் தன் அடியார்க்கும் அடியேன்;
பெரு நம்பி குலச்சிறை தன் அடியார்க்கும் அடியேன்;
பெரு மிழலைக் குறும்பற்கும், பேயார்க்கும், அடியேன்;
ஒரு நம்பி அப்பூதி அடியார்க்கும் அடியேன்;
ஒலி புனல் சூழ் சாத்த மங்கை நீல நக்கற்கு அடியேன்;
அரு நம்பி நமி நந்தி அடியார்க்கும் அடியேன்;
ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே. 4
வம்பு அறா வரிவண்டு மணம் நாற மலரும்
மது மலர் நல் கொன்றையான் அடி அலால் பேணா
எம்பிரான்-சம்பந்தன் அடியார்க்கும் அடியேன்;
ஏயர்கோன் கலிக்காமன் அடியார்க்கும் அடியேன்;
நம்பிரான்-திருமூலன் அடியார்க்கும் அடியேன்;
நாட்டம் மிகு தண்டிக்கும், மூர்க்கற்கும், அடியேன்;
அம்பரான்-சோமாசிமாறனுக்கும் அடியேன்;
ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே. 5
வார் கொண்ட வன முலையாள் உமை பங்கன் கழலே
மறவாது கல் எறிந்த சாக்கியற்கும் அடியேன்;
சீர் கொண்ட புகழ் வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன்;
செங்காட்டங்குடி மேய சிறுத்தொண்டற்கு அடியேன்;
கார் கொண்ட கொடை கழறிற்றறிவாற்கும் அடியேன்;
கடல் காழி கணநாதன் அடியார்க்கும் அடியேன்;
ஆர் கொண்ட வேல் கூற்றன்-களந்தைக் கோன்-அடியேன்;
ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே. 6
பொய் அடிமை இல்லாத புலவர்க்கும் அடியேன்;
பொழில் கருவூர்த் துஞ்சிய புகழ்ச்சோழற்கு அடியேன்;
மெய் அடியான்-நரசிங்க முனையரையற்கு அடியேன்;
விரி திரை சூழ் கடல் நாகை அதிபத்தற்கு அடியேன்;
கை தடிந்த வரிசிலையான்-கலிக் கம்பன், கலியன்,
கழல் சத்தி-வரிஞ்சையர்கோன்,- அடியார்க்கும் அடியேன்;
ஐயடிகள் காடவர் கோன் அடியார்க்கும் அடியேன்;
ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே. 7
கறைக் கண்டன் கழல் அடியே காப்புக் கொண்டிருந்த
கணம் புல்ல நம்பிக்கும், காரிக்கும், அடியேன்;
நிறைக் கொண்ட சிந்தையான், நெல்வேலி வென்ற
நின்ற சீர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன்;
துறைக் கொண்ட செம்பவளம் இருள் அகற்றும் சோதித்
தொல் மயிலை வாயிலான் அடியார்க்கும் அடியேன்;
அறைக் கொண்ட வேல் நம்பி முனையடுவாற்கு அடியேன்;
ஆரூரன் ஆரூரில்அம்மானுக்கு ஆளே. 8
கடல் சூழ்ந்த உலகு எலாம் காக்கின்ற பெருமான்-
காடவர் கோன்-கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்;
மடல் சூழ்ந்த தார் நம்பி இடங்கழிக்கும், தஞ்சை
மன்னவன் ஆம்செருத்துணை தன் அடியார்க்கும் அடியேன்;
புடை சூழ்ந்த புலி அதள் மேல் அரவு ஆட ஆடி
பொன் அடிக்கே மனம் வைத்த புகழ்த் துணைக்கும் அடியேன்;
அடல் சூழ்ந்த வேல் நம்பி கோட்புலிக்கும் அடியேன்;
ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே. 9
பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன்;
பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்;
சித்தத்தைச் சிவன் பாலே வைத்தார்க்கும் அடியேன்;
திரு ஆரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்;
முப்போதும் திருமேனி தீண்டுவார்க்கு அடியேன்;
முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன்;
அப்பாலும் அடிச் சார்ந்த அடியார்க்கும் அடியேன்;
ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே. 10
மன்னிய சீர் மறை நாவன்நின்றவூர் பூசல்,
வரிவளையாள் மானிக்கும், நேசனுக்கும், அடியேன்;
தென்னவனாய் உலகு ஆண்ட செங்கணாற்கு அடியேன்;
திருநீல கண்டத்துப் பாணனார்க்கு அடியேன்;
என்னவன் ஆம் அரன் அடியே அடைந்திட்ட சடையன்,
இசைஞானி, காதலன்-திரு நாவலூர்க் கோன்,
அன்னவன் ஆம் ஆரூரன்-அடிமை கேட்டு உவப்பார்
ஆரூரில் அம்மானுக்கு அன்பர் ஆவாரே. 11
Astrology
Bhagavad Gita
Bhagavatam
Bharat Matha
Devi
Devi Mahatmyam
Ganapathy
Garuda Puranam
Glory of Venkatesha
Hanuman
Kathopanishad
Mahabharatam
Mantra Shastra
Mystique
Practical Wisdom
Purana Stories
Radhe Radhe
Ramayana
Rare Topics
Rigveda Explained
Rituals
Sages and Saints
Shiva
Spiritual books
Sri Suktam
Story of Sri Yantra
Temples
Vedas
Vishnu Sahasranama
Yoga Vasishta