கற்பூர நாயகியே

 

Karpoora Nayagiye By LR Eashwari

 

கற்பூர நாயகியே கனகவல்லி
காளி மகமாயி கருமாரி அம்மா
பொற்கோவில் கொண்ட சிவ காமியம்மா
பூவிருந்த வல்லி தெய்வானையம்மா
விற்கால வேதவல்லி விசாலாட்சி
விழிக்கோல மாமதுரை மீனாட்சி
சொற்கோவில் நானமைத்தேன் இங்கு தாயே
சுடராக வாழ்விப்பாய் என்னை நீயே
புவன முழுதாளுகின்ற புவனேஸ்வரி
புரமெரித்தோன் புறமிருக்கும் பரமேஸ்வரி
நவநவமாய் வடிவாகும் நாகேஸ்வரி
நம்பினவர் கைவிளக்கே ஸர்வேஸ்வரி
கவலைகளைத் தீர்த்துவிடும் காளீஸ்வரி
காரிருளின் தீச்சுடரே ஜோதீஸ்வரி
உவமான பரம்பொருளே ஜகதீஸ்வரி
உன்னடிமைச் சிறியேனை நீயாதரி
உன்னிடத்தில் சொல்லாமல் வேறு எந்த
உறைவிடத்தில் முறையிடுவேன் தாயே எந்தன்
அன்னையவள் நீயிருக்க உலகில் மற்ற
அன்னியரைக் கெஞ்சிடுதல் முறையோ அம்மா
கண்ணீரைத் துடைத்துவிட ஓடி வாம்மா
காத்திருக்க வைத்திடுதல் சரியோ அம்மா
சின்னவளின் குரல்கேட்டுன் முகம் திருப்பு
சிரித்தபடி என்னைத் தினம் வழி அனுப்பு
கண்ணிரண்டும் உன்னுருவே காண வேண்டும்
காலிரண்டும் உன்னடியே நாட வேண்டும்
பண்ணமைக்கும் நா உனையே பாட வேண்டும்
பக்தியோடு கையுனையே கூடவேண்டும்
எண்ணமெல்லாம் உன் நினைவே ஆக வேண்டும்
இருப்பதெல்லாம் உன்னுடையதாக வேண்டும்
மண்ணளக்கும் சமயபுர மாரியம்மா
மகனுடைய குறைகளையும் தீருமம்மா
நெற்றியினுள் குங்குமமே நிறைய வேண்டும்
நெஞ்சினுலும் உன் திருநாமம் வழியவேண்டும்
கற்றதெல்லாம் மேன் மேலும் பெருக வேண்டும்
கவிதையிலே உன் நாமம் வாழ வேண்டும்
சுற்றமெல்லாம் நீடுழி வாழ வேண்டும்
ஜோதியிலே நீயிருந்து ஆள வேண்டும்
மற்றதெல்லாம் நானுனக்குச் சொல்லலாமா
மடிமீது பிள்ளை என்னைத் தள்ளலாமா
அன்னைக்கு உபசாரம் செய்வதுண்டோ
அருள் செய்ய இந்நேரம் ஆவதுண்டோ
கண்ணுக்கு இமையின்றிக் காவலுண்டோ
கன்றுக்கு பசுவின்றி சொந்தமுண்டோ
முன்னைக்கும் பின்னைக்கும் பார்ப்பதுண்டோ
முழுமைக்கும் நீ எந்தன் அன்னையன்றோ
எண்ணெய்க்கும் விளக்குக்கும் பேதமுண்டோ
என்றைக்கும் நானுந்தன் பிள்ளையன்றோ
அன்புக்கே நானடிமையாக வேண்டும்
அறிவுக்கே என் காது கேட்க வேண்டும்
வம்புக்கே போகாமல் இருக்க வேண்டும்
வஞ்சத்தை என் நெஞ்சம் மறக்க வேண்டும்
பண்புக்கே உயிர் வாழ ஆசை வேண்டும்
பரிவுக்கே நானென்றும் பணிய வேண்டும்
என்பக்கம் இவையெல்லாம் இருக்க வேண்டும்
என்னோடு நீ என்றும் வாழ வேண்டும்
கும்பிடவோ கையிரண்டும் போதவில்லை
கூப்பிடவோ நாவொன்றால் முடியவில்லை
நம்பிடவோ மெய்தன்னில் சக்தியில்லை
நடந்திடவோ காலிரண்டால் ஆகவில்லை
செம்பவள வாயழகி உன்னெழிலோ
சின்ன இரு கண்களுக்குள் அடங்கவில்லை
அம்பளவு விழியாலே உன்னை என்றும்
அடிபணியும் ஆசைக்கோர் அளவுமில்லை
காற்றாகி கனவாகிக் கடலாகினாய்
கயிறாகி உயிராகி உடலாகினாய்
நேற்றாகி இன்றாகி நாளாகினாய்
நிலமாகி பயிராகி உணவாகினாய்
தோற்றாலும் ஜெயித்தாலும் வாழ்வாகினாய்
தொழுதாலும் அழுதாலும் வடிவாகினாய்
போற்றாத நாளில்லை தாயே உன்னை
பொருளோடும் புகழோடும் வைப்பாய் என்னை

 

Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |